கவுதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் நடிகர் சிம்பு நடித்து சமீபத்தில் வெளிவந்த ‘வெந்து தனிந்து காடு’ (Venthu thaninthathu kaadu) திரைப்படம் ரசிகர்கள் மட்டுமின்றி அனைத்து தரப்பினராலும் நல்ல பாராட்டையும் வரவேற்பையும் பெற்றுள்ளது.
அதிலும் குறிப்பாக படத்தில் வரும் அனைத்து பாடல்களும் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.ஏ.ஆர் ரஹ்மானின் இசையில் அனைத்து பாடல்களும் சூப்பர் டூப்பர் ஹிட் ஆகியுள்ள நிலையில், படத்தில் வரும் மல்லிப்பூ என்ற பாடல் ஏகோபித்த வரவேற்பை பெற்றுள்ளது.
இந்த பாட்டுக்கென தனியாக ரசிகர் பட்டாளம் உருவாகியுள்ள நிலையில், நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் பாடலை புகழ்ந்து பாராட்டி உள்ளார்.இந்த மல்லிப்பூ பாடலை எழுதிய பாடலாசிரியர் தாமரை, இசையமைசப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் ஆகிய இருவரையும் மல்லிப்பூ பாடலிற்காக பாராட்டு மடல் ஒன்றை சீமான் எழுதி அதை ட்விட்டரில் வெளியிட்டுள்ளார்.
மல்லிப்பூ பாடல் வரிகள் 👉 Mallipoo Song Lyrics
சீமான் தனது பாராட்டு மடலில் கூறியது, “என்னுடைய அன்புத்தம்பி சிம்பு, சித்தி இதானி நடித்து, தமிழினத்தின் பெருமைமிகு இசைத்தமிழன் என் ஆருயிர் இளவல் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்து ‘வெந்து தணிந்தது காடு’ திரைப்படம் வெளி வந்திருக்கிறது.
அதில் என் அன்பிற்கும் பாசத்திற்கும் உரிய அக்கா ‘தாமரை’ அவர்கள் எழுதி பாடகி மதுஸ்ரீ அவர்களின் இனிமையான குரலில் பாடியிருக்கின்ற மல்லிப்பூ பாடலை தற்போது எண்ணற்ற முறை என் பயணங்களிலும், என் ஓய்வு நேரங்களிலும் கேட்டு ரசித்து கொண்டு இருக்கிறேன்.
மனைவியை பிரிந்து தூரத்தில் பணிபுரியும் தன் அருமை கணவனை நினைத்து அன்பு மனைவி பாடுவது போல அமைந்திருக்கும் மல்லிப்பூ பாடல் வரிகளும், பாடலில் வரும் இசை கோர்ப்பும் இனிமையாக அமைந்திருப்பது மனதை மயக்குகிறது.
கணவனைப் பிரிந்து இருக்கக்கூடிய பெண்ணின் வலியையும், ஏக்கத்தையும் தன்னுடைய அழகு தமிழால் அப்படியே வடித்திருக்கின்ற அக்கா தாமரை அவர்களுக்கும், அவ்வரிகளுக்கு மிகச்சிறந்த இசையால் உயிர் கொடுத்திருக்கும் நம் தலைமுறையின் ஈடு இணையற்ற இசைத்தமிழன் ஏ.ஆர்.ரஹ்மானுக்கும் எனது பாராட்டுகளும், வாழ்த்துகளும்!
உங்கள் பணி மென்மேலும் தொடரட்டும் தொடரட்டும்!
அக்கா தாமரை அவர்களுக்கு இதுபோன்ற மிகச் சிறந்த பாடல்கள் எழுதுவதற்கான வாய்ப்பைத் தொடர்ந்து வழங்கிவரும் இயக்குநர் அன்பு சகோதரன் கெளதம் வாசுதேவ் மேனன் அவர்களுக்கும், இப்படத்தைத் தயாரித்துள்ள சகோதரர் ஐசரி கணேஷ் அவர்களுக்கும் எனது பேரன்பும், வாழ்த்துகளும்… இவ்வாறு சீமான் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.