தமிழ் சினிமாவில் பெரிய பட்ஜெட்டில் முன்னணி நடிகர்களின் படங்கள் வந்து வெற்றி பெறுவது தான் இயல்பு. ஆனால் புதிய கதாநாயகன் மற்றும் சிறிய பட்ஜெட் என லவ் டுடே போன்ற படங்கள் வெற்றி பெறுவது அரிது.
அந்த வரிசையில் கடந்த 2022 நவம்பர் 4ஆம் தேதி ஏ.ஜி.எஸ் தயாரிப்பு நிறுவனம் தயாரிப்பில் கோமாலி திரைப்படத்தின் இயக்குனர் பிரதீப் ரங்கநாதன் இயக்கி, நடித்த லவ் டுடே திரைப்படம் திரையரங்குகளில் ரிலீசானது.
படம் ரிலீசான முதல் நாள் குறைவான டிக்கெட்டுகளே புக் செய்யப்பட்டது பின் படிப்படியாக அடுத்தடுத்த நாட்களில் ரசிகர்களிடம் நல்ல ஆதரவை பெற்ற நிலையில் லவ் டுடே படத்தின் சாதனை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

வெறும் 5 1/2 கோடி ரூபாய் பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட லவ் டுடே திரைப்படம், படம் ரிலீசாகி மூன்று வாரங்களில் 50 கோடி ரூபாய் வரை வசூல் படைத்துள்ளது. மேலும் இந்த 2022 ஆம் வருடத்தில் தமிழ் சினிமாவில் அதிக வசூல் சாதனை படைத்த திரைப்படங்களில் லவ் டுடே திரைப்படமும் இடம்பெற்று சாதனை படைத்துள்ளது.
திரைப்படம் ரிலீசாகி மூன்று வாரங்களே ஆன நிலையில் மற்ற முன்னணி நடிகர்களான சிம்பு மற்றும் கார்த்தியின் திரைப்படங்கள் மூன்று வாரங்களில் செய்யாத சாதனையை லவ் டுடே திரைப்படம் செய்துள்ளது.
இதில் முக்கியமாக நடிகர் சிம்புவின் நடிப்பில் 2021 ஆம் ஆண்டு வெளியான மாநாடு திரைப்படம் மூன்று வாரங்களில் 40 கோடி வரை மட்டுமே வசூல் செய்தது, பிரதீப் ரங்கநாதனின் லவ் டுடே திரைப்படம் 50 கோடி வரை வசூலித்துள்ளது தொடர்ந்து நடிகர் கார்த்தியின் நடிப்பில் வெளியான கைதி திரைப்படத்தின் மூன்று வார கால வசூல் சாதனையையும் லவ் டுடே படம் முறியடித்து வருகிறது.
இன்னும் திரையரங்கில் லவ் டுடே திரைப்படம் ஓடிக்கொண்டிருக்கும் நிலையில், நடிகர் தனுஷின் நடிப்பில் இந்தாண்டு வெளியான திருச்சிற்றம்பலம் திரைப்படத்தின் 70 கோடி ரூபாய் வசூலையும் முறியடிக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான டாக்டர் திரைப்படம், நடிகர் ராகவா லாரன்ஸ் நடிப்பில் வெளியான காஞ்சனா 3 திரைப்படம் உள்ளிட்ட படங்கள் ரிலீசான 4 வாரங்களில் 70 கோடி வசூலை படைத்திருந்தநிலையில் லவ் டுடே திரைப்படம் இந்த சாதனையை கூடிய விரைவில் முறியடிக்க அதிக வாய்ப்புகள் உள்ளது.
உதயநிதி ஸ்டாலினின் பட தயாரிப்பு நிறுவனமான ரெட் ஜெயிண்ட் மூவீஸ் லவ் டுடே திரைப்படத்தின் திரையரங்கு விநியோகஸ்தர் உரிமையை வாங்கியுள்ள நிலையில் 70 சதவிகிதம் திரையரங்குகளில் இத்திரைப்படம் விநியோகம் செய்யப்பட்டுள்ளது.
இதன் இடையே பிரதீப் ரங்கநாதன் இயக்கிய இரண்டாவது திரைப்படமே 50 கோடிக்கு வசூலை படைத்துள்ளது அவரது ரசிகர்களை சந்தோஷத்தில் ஆழ்த்தியுள்ளது.
மேலும் இப்படத்தின் வசூல் மூலம் மக்கள் நல்ல கதையை மட்டுமே எதிர்பார்க்கிறார்கள் முன்னணி நடிகர்களை எதிர்பார்க்கவில்லை என்று தெளிவாக தெரிகிறது.