தமிழ்நாட்டில் 12 மணி நேரம் வேலை செய்யும் மசோதா சட்ட சபையில் நிறைவேற்றம்
தமிழ்நாட்டில் உள்ள தனியார் நிறுவனங்களில் வேலை நேரத்தை 8 மணிநேரத்தில் இருந்து 12 மணநேரமாக அதிகப்படுத்துவது தொடர்பான மசோதாவை தொழிலாளர் நல துறை அமைச்சர் சி.வி.கணேசன் சட்ட சபையில் தாக்கல் செய்தார்.
இந்த திட்டத்திற்கு எதிர்கட்சிகள் மட்டுமல்லாமல் தி.மு.க வுடன் கூட்டணியில் இருக்கும் காங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்ட், மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட், ம.தி.மு.க, வி.சி.க, மனித நேய மக்கள் கட்சிகளும் இந்த மசோதாவிற்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.
மேலும் இந்த மசோதாவிற்கு எதிர்ப்பு தெரிவித்து வெளிநடப்பும் செய்தனர்.ஆனாலும் எதிர்ப்புகளுக்கு இடையே குரல் வாக்கெடுப்பு மூலம் மசோதா நிறைவேறியது.
மேலும் இது குறித்து தொழிலாளர் நல துறை அமைச்சர் சி.வி.கணேசன், வாரத்திற்கு 48 மணி நேர வேலை என்பது 4 நாட்களில் நிறைவடையும், தொழிலாளர் விரும்பினால் 5வது நாள் வேலைக்கு செல்லலாம், அதற்கு சம்பளம் வழங்கப்படும். இல்லையெனில் விடுப்பு எடுத்துக் கொள்ளலாம்.
இந்த மசோதா குறித்து விளக்கம் அளித்து பேசிய அமைச்சர் தங்கம் தென்னரசு, “வெளிநாட்டு நிறுவனங்கள் முதலீட்டிற்காக தமிழ்நாட்டை நோக்கி வருகின்றனர். தொழிற்சாலைகளில் நெகிழ்வு தன்மை வரவேண்டும் என்பதற்காக மட்டுமே இந்தச் சட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது. எந்த தொழிற்சாலைகள் மற்றும் தொழிலாளர்கள் விரும்புகிறார்களோ, அவர்களுக்கு மட்டுமே இந்த சட்டம் பொருந்தும். மேலும் இது தொடர்பாக உயர்மட்ட குழு அமைக்கப்படும்” என்று தெரிவித்தார்.